ஹைதராபாத்: தெலுங்கானாவில் இருக்கும் அரசுப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியிலும் மாணவர்களுக்கு மதிய உணவு சமைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்களிலும் நஞ்சு கலந்த ஆடவரைக் காவல்துறை கைது செய்தது.
குடும்பத் தகராறால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அச்செயலில் ஈடுபட்டதாக 27 வயதான சோயம் கிஷ்து, காவல்துறை விசாரணையில் தெரிவித்தார்.
தெலுங்கானாவின் ஆதிலாபாத் மாவட்டம், தரம்பூரி அரசு தொடக்கப் பள்ளியில் 30 மாணவர்கள் படிக்கின்றனர். மூன்று நாள்கள் தொடர் விடுமுறைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) பள்ளி திறக்கப்பட்டது.
மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு முன்னதாக, அவர்களுக்கு உணவு சமைப்பதற்காக மதிய உணவு திட்ட ஊழியர்கள் பள்ளிக்கு வந்தனர்.
சமையல் பாத்திரங்களைக் கழுவுவதற்காகக் தண்ணீர் குழாயைத் திறந்தனர். அப்போது அதிலிருந்து துர்நாற்றம் வீசியது.
உடனே, குடிநீர்த் தொட்டியில் இருந்த தண்ணீரைப் பார்த்தனர். அந்நீரின் நிறம் மாற்றமடைந்தும் துர்நாற்றமும் வீசியது.
உடனே, குடிநீர்த் தொட்டியில் இருக்கும் நீரைப் பருக வேண்டாம் என மாணவர்களைத் தலைமை ஆசிரியர் எச்சரித்தார்.
அது குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
விரைந்து வந்து நிபுணர்கள் மூலம் தண்ணீரைச் சோதனைசெய்த காவல்துறை, அதில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பதைக் கண்டறிந்தனர்.
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், நஞ்சு கலப்பில் தொடர்புடைய நபரைக் காவல்துறை கைது செய்தது.