காந்தி நகர்: அரபிக் கடல் மூலம் இந்தியாவுக்குக் கடத்தி வரப்பட்ட ரூ. 1,150 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
படகில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், குஜராத் மாநிலம், முந்த்ரா துறைமுகம் அமைந்துள்ள கட்ச் மாவட்டத்தில் இருந்து ஐந்து கடல் மைல் தொலைவில் நின்றுகொண்டிருந்த படகில் கடலோரக் காவல்படையினர் சோதனை மேற்கொண்டனர்.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினரும் இந்த நடவடிக்கையில் இணைந்தனர். அரபிக்கடலில் தீவிர சுற்றுக்காவல் பணி மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, கடலில் நிறுத்தப்பட்டிருந்த சரக்குக் கப்பலில் ஏறி அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதில் இருந்த ஐந்து மூட்டைகளைப் படகில் இருந்தவர்கள் கடலில் வீசினர்.
இதைக் கவனித்த அதிகாரிகள், அந்த ஐந்து மூட்டைகளையும் மீட்டு, பின்னர் பறிமுதல் செய்தனர். அவற்றில் 115 கிலோ ‘கொக்கைன்’ போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. அதன் அனைத்துலகச் சந்தை மதிப்பு ரூ. 1,150 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.
போதைப்பொருளைக் கடத்திவந்த படகும் கைப்பற்றப்பட்ட நிலையில், அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

