புதுடெல்லி: கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை (சிஜேபி) அரசியல் கட்சியாக மாற்றும் எந்த எண்ணமும் தங்களுக்கு இல்லை என்று அதன் நிறுவனர் அபிஜித் திப்கே கூறியுள்ளார்.
தங்கள் அமைப்பை எவ்வாறு விரிவுபடுத்துவது, மக்கள் நலனுக்கான பிரச்சினைகளைக் கண்டறிவது, வரைபடத்தை உருவாக்குவது குறித்துத் தீவிரமாக விவாதிக்க உள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
விரைவில் தேசிய அளவில் பிரசாரக் குழு அமைக்கப்படும்.
அந்தக் குழுவின் மூலம் ‘மக்கள் என்ன சொல்கிறார்கள்’ என்ற பெயரில் பிரச்சினைகள் கண்டறியப்படும்.
இப்பிரசாரத்தில் கல்விக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் அபிஜித் திப்கே விளக்கமளித்தார்.
இந்நிலையில், சிஜேபி அமைப்பின் தேசிய செயற்குழு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளராக அபிஜித் திப்கே நியமிக்கப்பட்டுள்ளார்.
இணை ஒருங்கிணைப்பாளர்களாகச் செய்தித் தொடர்பாளர்கள் சவுரவ் தாஸ், ஆஷுதோஷ் ரங்கா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.


