தேசிய வேலை உறுதித் திட்டம்: நிறைவேறியது முதல்வரின் தனித் தீர்மானம்

2 mins read
dbaff236-d6d3-43d5-9b32-c5ff6a745f2d
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்படி, கிராமப்​புறங்களைச் சேர்ந்தோருக்கு வேலை​வாய்ப்பு உறுதி செய்​யப்​பட வேண்டும் என்று தீர்மானத்தில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். - கோப்புப் படம்: இந்து தமிழ் திசை

சென்னை: தேசிய ஊரக வேலை உறுதித் திட்​டம் தொடர்வதை உறுதிசெய்யும் வகையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தாக்கல்செய்த தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்தத் திட்டம், மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்​டும் என்றும் அதற்கான நிதியுதவியைக் குறைக்கக்கூடாது என்றும் அவர் தீர்மானத்தில் வலியுறுத்தியிருந்தார். தீர்மானத்தைத் தமிழகச் சட்டமன்றம் ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்குப் பதிலாக மத்திய அரசாங்கம் விக்​‌ஷித் பாரத் ஊரக வேலை, வாழ்​வா​தார உறுதி இயக்​கத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருக்கிறது.

மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தமிழகச் சட்டமன்றத்தில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) திரு ஸ்டாலின், தனித் தீர்மானமொன்றைத் தாக்கல்செய்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்படி, கிராமப்​புறங்களைச் சேர்ந்தோருக்கு வேலை​வாய்ப்பு உறுதி செய்​யப்​பட வேண்டும்; அத்துடன் மாநிலச் செயல்​திறன் அடிப்​படை​யில் நிதி தொடர்ந்து ஒதுக்கப்படுவதும் உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மாற்​றுத் திற​னாளி​கள், ஆதி​தி​ரா​விடர், பழங்​குடி​யினர் முதலியோர் திட்டத்தின் மூலம் பயனடைந்​துவந்தனர். அவர்​களின் வாழ்​வா​தா​ரம் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய நிதியுதவியும் தொடர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. வேலைக்​கான தேவைக்கு ஏற்ப நிதி ஒதுக்கும் முறையைத் தொடர வேண்டும்; அதன் தொடர்பில் மாநிலங்​களுக்​கான ஒதுக்​கீட்டைப் பகிர்ந்​தளிக்​கும் வழி​முறையை மாநில அரசாங்கமே வகுத்​துக்கொள்ள அனுமதிக்க வேண்​டும் என்ற கோரிக்கையும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. புதிய திட்​டத்​தில் மாநில அரசாங்கத்தின் பங்​களிப்பு விகிதம் 40 விழுக்காட்டுக்கு உயர்த்​தப்​பட்​டுள்​ளது. அதனால் மாநில அரசாங்கத்தின் நிதிச்​சுமை கூடும். அதைத் திருத்​தி​யமைக்க வேண்​டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தீர்மானம் குறித்து முதலில் முதல்​வர் ஸ்டா​லின் முன்மொழிந்து பேசி​னார். அதனையடுத்துச் சட்டமன்ற உறுப்​பினர்​கள் பேசினர். பிறகு, முதல்​வர்​ ஸ்டா​லின்​ முன்​மொழிந்​த தீர்​மானம், குரல்​ வாக்​கெடுப்​பின்வழி நிறைவேற்றப்பட்டது.

குறிப்புச் சொற்கள்