பாட்னா: நேப்பாளத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, பீகார் மாநில நதிகளில் வழக்கத்துக்கு மாறாக மிகப்பெரிய அளவிலான மீன்கள் தென்படுகின்றன.
இத்தகைய அறியாத மீன்களைப் பிடிப்பதையும் உண்பதையும் தவிர்க்குமாறு அம்மாநில மீன்வளத்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேப்பாளத்தில் ஏற்பட்ட கனமழையால் பீகாரின் கிழக்கு, மேற்குப் பகுதிகளில் ஆற்றுநீரில் 27 கிலோ முதல் 45 கிலோ வரை எடையுள்ள பெரிய மீன்கள் மீனவர்களின் வலையில் சிக்கி வருகின்றன.
இவ்வகையான மீன்களைச் சமைத்துச் சாப்பிட்ட சிலருக்கு உடல்நலக்குறைவும் ஒவ்வாமையும் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஆற்று நீரில் அழுகிய சடலங்கள் அடித்து வரப்பட்டிருக்கலாம் என்பதால், நீர் மாசடைந்திருக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
எனவே, பொதுமக்கள் இந்த மீன்களைப் பிடித்து விற்பனை செய்யவோ வாங்கவோ வேண்டாம் என்றும் இத்தகைய மீன்கள் கண்ணில் பட்டால் உடனடியாக மீன்வளத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அம்மாநில அமைச்சர் நந்த் கிஷோர் ராம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் உடனே மருத்துவச் சிகிச்சை பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


