பாட்னா: பீகாரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரில் வசிப்பிடச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்த இளையரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
அங்குள்ள சமஸ்திபுர் மாவட்டத்தைச் சேர்ந்த அடையாளம் தெரியாத அந்த ஆடவர், தனது விண்ணப்பப் படிவத்தில் அதிபர் டிரம்ப்பின் புகைப்படத்தைப் பயன்படுத்தி உள்ளார். மேலும், சான்றிதழில் இடம்பெற வேண்டிய முகவரியையும் குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை 29ஆம் தேதியன்று அளிக்கப்பட்ட அவரது விண்ணப்பத்தை அதிகாரிகள் சரிபார்த்த போது, அதிலுள்ள புகைப்படம், ஆதார் அட்டை எண், முகவரி என அனைத்து விவரங்களும் தவறானவை எனத் தெரியவந்தது.
இதையடுத்து, அந்த ஆடவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அரசு நிர்வாகத்தின் நம்பிக்கையையும் நேர்மையையும் சிதைக்கும் வண்ணம், திட்டமிட்டு இந்த விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து இணையக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.