கோல்கத்தா: மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் வெற்றியை உறுதி செய்வதுடன் டெல்லியைக் கைப்பற்றுவதே தனது இலக்கு என மம்தா பானர்ஜி சூளுரைத்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், அரசியல் கட்சிகள் அடுத்தகட்டப் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜகவால் மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை ஒருபோதும் வீழ்த்த முடியாது என்றார்.
அம்மாநில மக்கள் அநீதிக்கு எதிராக போராடி வருவதாகவும் உரிமைகளுக்காக குரல்கொடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்ததும், அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து டெல்லியைக் கைப்பற்றும் முயற்சியில் தாம் வெற்றி பெறுவது உறுதி என்றார் முதல்வர் மம்தா.
டெல்லியில் இருந்து பாஜகவை முற்றிலுமாக அகற்றுவதுதான் தமது குறிக்கோள் என்றும் பதவி, அதிகாரம் மீது தமக்கு எந்தவித விருப்பமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
“மேற்கு வங்கத்தில் பாஜகவின் வீழ்ச்சி தவிர்க்க முடியாதது. டெல்லியில் இருந்தும் பாஜக வெளியேற்றப்பட வேண்டும் என்பதே எங்கள் இலக்கு,” என்று பிரசாரக் கூட்டத்தில் பேசியபோது முதல்வர் மம்தா குறிப்பிட்டார்.
அவரது இந்த கருத்து குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “மேற்கு வங்கத்திலேயே மம்தாவுக்கு மிச்சம் எதுவுமில்லை. அவரால் எப்படி டெல்லிக்கு வரமுடியும்?,” என்று கேள்வி எழுப்பினார்.

