மும்பை: இந்தியாவிற்குள் கள்ளத்தனமாக நுழைந்து, உரிய ஆவணங்களின்றிச் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த பங்ளாதேஷியர் ஒன்பது பேரை மகாராஷ்டிர மாநிலத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் படை செவ்வாய்க்கிழமையன்று (டிசம்பர் 31) கைதுசெய்தது.
இதனையடுத்து, டிசம்பர் மாதத்தில் மட்டும் பங்ளாதேஷியர் 43 பேரைப் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் கைதுசெய்துள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
கடந்த நான்கு நாள்களில் மும்பை, நாசிக், நாண்டெட், சத்ரபதி சம்பாஜி நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த காவல்துறையினரின் துணையுடன் இந்த அதிரடி நடவடிக்கைகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை கைதான ஒன்பது பேரில் எட்டு ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவர். அவர்கள் 26 முதல் 54 வயதிற்குட்பட்டவர்கள். அவர்களிடமிருந்து கைப்பேசிகளும் ரூ.35,000 மதிப்புள்ள பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
போலியான ஆவணங்களைக் கொண்டு ஆதார் அட்டைகளை அவர்கள் பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
உரிய சட்டப்பிரிவுகளின்கீழ் காவல்துறை அவர்கள்மீது ஐந்து வழக்குகளைப் பதிவுசெய்துள்ளது.

