மகா கும்பமேளா நகர்: உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியுள்ளது.
இதுகுறித்து உத்தரப் பிரதேச அரசு வியாழக்கிழமை (ஜனவரி 23) வெளியிட்ட ஓர் அறிக்கையில், “உலகின் மிகப்பெரிய மத விழாவான மகா கும்பமேளா பிரயாக்ராஜில் ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. வரும் பிப்ரவரி 26 வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் 45 கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என்று ஏற்கெனவே மதிப்பிடப்பட்டிருந்தது.
“இந்நிலையில், கங்கை, யமுனை, புராணத்தில் கூறப்பட்ட சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடமாகக் கருதப்படும் திரிவேணி சங்கமத்தில் நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை ஜனவரி 23 மதியம் 12 மணி நிலவரப்படி 10 கோடி என்ற மைல்கல்லைத் தாண்டியுள்ளது.
“கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் லட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது. புனித நீராடுவதிலும், ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதிலும் பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே, இந்த எண்ணிக்கை அடுத்த சில நாள்களில் இரண்டு மடங்காக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்று தெரிவித்துள்ளது.