புதுடெல்லி: ரயில் சேவைகளைப் பெற வெவ்வேறு கைப்பேசிச் செயலிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ‘ரெயில் கனெக்ட்’, புறநகர் ரெயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட் பெற ‘யு.டி.எஸ்.’ இதுதவிர்த்து, தனியார் துறையினரின் செயலிகளும் நடப்பில் இருந்தன.
இதற்கிடையே, ரயில் சேவை தொடர்பான அனைத்துச் சேவைகளையும் ஒரே செயலியில் பெறும் வகையில் ‘ரயில்ஒன்’ என்னும் செயலியை ரயில்வே அமைச்சு உருவாக்கியுள்ளது. இந்தச் செயலியை ரயில்வே துறை அமைச்சர் கடந்த வாரம் அறிமுகம் செய்து வைத்தார்.
‘ரயில்ஒன்’ செயலியில், முன்பதிவு ரயில் பயணச் சீட்டு, முன்பதிவில்லாப் பயணச் சீட்டு, நடைமேடைச் சீட்டு, ரயில்கள் மற்றும் பிஎன்ஆர் எண் குறித்த விசாரணை, பயணத் திட்டமிடல், ரயில் உதவிச் சேவைகள், ரயிலில் உணவு முன்பதிவு உள்ளிட்ட அனைத்துச் சேவைகளையும் பெறலாம்.
இந்தச் செயலி அறிமுகமானதைத் தொடர்ந்து ரயில்வே துறையின் பலதரப்பட்ட சேவைகளைப் பெற இனி தனித்தனிச் செயலிகளைப் பதிவிறக்க வேண்டாம். இந்தச் செயலி பயணிகளிடையே பெருவரவேற்பைப் பெற்றுள்ளது.

