அமெரிக்க, சீனப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்தியா தகவல்

அமெரிக்க, சீனப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்தியா தகவல்

2 mins read
db23138c-d627-47b6-87f0-813fb38a1f83
இந்திய விமானப்படை தளபதி ஏ.பி.சிங். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது, பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்திய அமெரிக்க, சீனப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தளபதி ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ‘எஃப் 16’, சீனாவின், ‘ஜே 17 எஸ்’ என பனிரெண்டுக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது, பாகிஸ்தானின் ஆறு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.

“’ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது பாகிஸ்தான் ராணுவம் அதிக இழப்புகளைச் சந்தித்தது. பாகிஸ்தானின் வான்வழி முன்னெச்சரிக்கை, கட்டுப்பாட்டு விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதற்கான ஆதாரங்கள் உள்ளன.

“இந்தியப் படைகளின் துல்லிய ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் பாகிஸ்தானின் முக்கிய ராணுவக் கட்டமைப்புகள் செயலிழக்க வைக்கப்பட்டன,” என்றார் தளபதி ஏ.பி.சிங்.

நான்கு இடங்களில் ரேடார் அமைப்புகள், இரண்டு இடங்களில் கட்டளை, கட்டுப்பாட்டு மையங்கள், இரண்டு இடங்களில் ஓடுபாதைகள் சேதமடைந்ததாகக் குறிப்பிட்ட அவர், மூன்று விமானத் தளங்களில் ‘ஹேங்கர்’கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.

“மேலும், தரையில் இருந்து வான் நோக்கிப் பாயும் ஏவுகணை அமைப்பும் அழிக்கப்பட்டது. மோதலைத் தொடர்ந்தால், இந்தியாவின் தாக்குதல் திறன், ரஷ்யாவின், ‘எஸ் - 400’ வான் பாதுகாப்பு அமைப்பின் பலம் காரணமாக அதிக இழப்புகளை சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்த பிறகே பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்காக இந்தியாவிடம் கெஞ்சியது என்று விமானப்படைத் தளபதி ஏ.பி.சிங் தெரிவித்தார்.

‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவுப் போக்கு குறித்து ஐநா பொதுப்பேரவையில் இந்தியா கடுமையாக குற்றஞ்சாட்டி இருந்தது.

இந்நிலையில், இந்திய விமானப்படைத் தளபதியும் ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ குறித்து மீண்டும் சில விளக்கங்களை அளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்