புதுடெல்லி: இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ளன.
இந்துக்களின் முக்கியமான விழாவாகக் கருதப்படும் நவராத்திரி, ஆயுத பூஜை, விஜயதசமி அடுத்த மாதம் வர இருக்கிறது. அதைத்தொடர்ந்து தீபாவளி பண்டிகையும் வருகிறது.
இந்த பண்டிகை நாள்களில் இனிப்புகளுக்கு முக்கிய இடம் உண்டு.
ஆயுத பூஜையில் இருந்து இனிப்புகளின் தேவை அதிகரிக்கும்.
இந்நிலையில் பண்டிகை காலங்களில் இனிப்புகளின் தரம் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என மத்திய உணவு தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.
இனிப்பு விற்பனைக் கடை, பேக்கரிகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவை அதிகரிப்பால் இனிப்புகளின் தரத்தை குறைக்க வாய்ப்புள்ளது. அதனால் இனிப்பு விற்பனைக் கடைகள், பேக்கரிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என கடிதத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

