புதுடெல்லி: சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதக் சுட்டிக்காட்டிய இந்திய உச்ச நீதிமன்றம், அதில் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கான நடைமுறையை உடனடியாக உருவாக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சாலைகளில் திரியும் விலங்குகளின் உரிமையாளர்களே அவற்றால் ஏற்படும் விபத்துகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், கால்நடைகள் அன்றாடம் உரிய இருப்பிடத்திற்குத் திரும்புவதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
வளர்ப்பு விலங்குகளை அடையாளம் காண கண்காணிப்புப் பட்டையை (microchip/tracking band) கட்டாயமாகப் பொருத்த வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தினர்.
இதன் மூலம் விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதோடு, அவற்றுக்கு உரிய காலங்களில் தடுப்பூசி, மருத்துவச் சிகிச்சைகள் கிடைப்பதையும் உறுதி செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் கால்நடைப் பாதுகாப்புச் சட்டங்களை உடனடியாகவும் முழுமையாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சாலைகளில் திரியும் கால்நடைகளால் நேரும் விபத்துகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காகத் தேவைப்பட்டால் சட்டத் திருத்தங்களையோ புதிய விதிகளையோ அரசுத் துறைகள் உடனடியாக இயற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் வலியுறுத்தியுள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் சாலையில் நடந்து சென்றபோது மாடு முட்டி உயிரிழந்த சம்பவத்தில், அவரது மனைவி நிஷா தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.
பஞ்சாப் உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி 1988ஆம் ஆண்டு, மோட்டார் வாகன சட்ட விதிகளின் கீழ் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.29.32 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். வழக்கு மேல் முறையீட்டுக்குச் சென்றபோது தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை நீதிமன்ற அமர்வு ரத்து செய்தது.
அதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பத்தை உரிமையியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவது, அவர்களுக்கு எந்தவொரு நிவாரணமும் கிடைக்காமல் செய்வதற்குச் சமம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. வழக்கின் தனித்துவமான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, நிஷாவுக்கு ஒட்டுமொத்த இழப்பீடாக ரூ.15 லட்சம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கின் எல்லையை விரிவுபடுத்திய நீதிபதிகள் அமர்வு, இந்தியச் சாலைகளில் திரியும் கால்நடைகளால் ஏற்படும் பெரிய அளவிலான பிரச்சினையை ஆராய முன்வந்தது. இத்தகைய சம்பவங்கள் இனி தனிப்பட்ட நிகழ்வுகள் அல்ல என்றும், நாடு முழுவதும் உள்ள நடையர்களையும் வாகன ஓட்டிகளையும் இவை வெகுவாகப் பாதிப்பதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

