புதுடெல்லி: ரஃபேல் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுவது பொய் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியாவின் 36 ரஃபேல் போர் விமானங்களும் நாட்டின் விமானப்படை சேவையில் இருப்பதாகவும் அது கூறியது.
கடந்த ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பஹல்காம் பகுதியில் தாக்குதல் நடத்தினர். அதற்குப் பதிலடி தரும் விதமாக மே 6ஆம் தேதி இரவு, இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களைத் தாக்கியது.
இதன் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ மோதல் தொடங்கியது. பின்னர் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தால் பூசல் முடிவுக்கு வந்தது.
இருப்பினும் சண்டை காலத்தில் இந்தியாவின் ஐந்து ரஃபேல் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்தது. அதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.
இதுதொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள ஆவணத்தில் கூறியிருப்பதாவது, “2016ஆம் ஆண்டு இந்தியா-பிரான்ஸ் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி வாங்கப்பட்ட 36 ரஃபேல் போர் விமானங்களும் சேவையில் உள்ளன. இந்த விமானங்களைப் பராமரிப்பதற்கான ஐந்து மாதக் கால ஏலம் மீண்டும் கோரப்பட்டுள்ளது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் எந்த ஒரு ரஃபேல் விமானமும் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
ஏதேனும் விமான இழப்பு ஏற்பட்டிருந்தால், பராமரிப்பு ஏல ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விமானங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்திருக்கும் என்று கவனிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

