புதுடெல்லி: இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவினால் பாதிக்கப்படாமல் தூங்கிக் கொண்டிருந்த 11 மாத பெண் குழந்தை அதிசயமாக உயிர் பிழைத்தது. ஆனால், குழந்தையின் பெற்றோரும் பாட்டியும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் இரவு 1 மணியளவில் நடந்தது. ஆனால், சிறுமி காலையில் வீட்டில் தனியாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் நடந்தபோது கனமழை பெய்து கொண்டிருந்ததை அடுத்து, மழைநீர் வீட்டிற்குள் புகுந்தது. தேங்கி நிற்கும் மழை நீரை வேறு திசையில் திருப்பிவிட குழந்தையின் தந்தை ரமேஷ் குமார், தாய் ராதா தேவி, பாட்டி பூனம் தேவி ஆகியோர் முயன்றுகொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் கொல்லப்பட்டனர்.
வீட்டில் குழந்தை மட்டும் தனியாக இருப்பது குறித்து குழந்தையின் மாமாவிடம் அக்கம்பக்கத்தினர் தெரியப்படுத்தினர்.
சிறுமியின் மாமா கூறுகையில், “குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்வதற்காக கடந்த சில நாள்களாக பல அழைப்புகள் வந்துகொண்டுள்ளன.
“நாங்கள் அவளை யாருக்கும் கொடுக்க விரும்பவில்லை. நாங்களே வளர்ப்போம்,” என்று என்டிடிவி ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார்.
ஜூன் 20 அன்று பருவமழை தொடங்கியதிலிருந்து இமாச்சலப் பிரதேசத்தில் குறைந்தது 78 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 50 பேர் நிலச்சரிவு, திடீர் வெள்ளம், மேக வெடிப்பு போன்ற மழை தொடர்பான சம்பவங்களில் இறந்துள்ளனர். அதே நேரத்தில் 28 பேர் சாலை விபத்துகளிலும் இறந்துள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கனமழையால் பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் 23 திடீர் வெள்ளப்பெருக்குகள், 19 மேக வெடிப்புச் சம்பவங்கள், 16 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.