லக்னோ: பாட்னாவிலிருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டதை அடுத்து அந்த விமானம் லக்னோவில் அவசரமாகத் தரையிறங்க முற்பட்டது.
இண்டிகோ பணியாளர்கள் உடனடியாக மருத்துவ உதவி அளித்திருந்தபோதும் பாதிக்கப்பட்ட பயணி, ‘6இ2163’ சேவை எண் கொண்ட அந்த விமானத்தில் உயிரிழந்தார்.
அசாமைச் சேர்ந்த சதீஷ் சந்திரா பர்மனுக்குத் திடீரென உடல்நலம் சரியில்லாதபோது விமானப் பணியாளர்கள் உடனே விரைந்து மருத்துவ உதவியளித்து அவரைக் காப்பாற்ற முற்பட்டனர்.
விமானம் லக்னோ நகருக்குத் திசை திருப்பப்பட்டது. இருந்தபோதும் திரு சதீஷின் உயிர் பிரிந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், உயிரிழந்த பயணியின் உடல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
விமானப் பயணத்தின்போது விமானச் சேவைகள் அவசரகால நடைமுறைகளைப் பின்பற்றுகின்றனர். அடிப்படையான உயிர்க்காப்பு முறைகளைச் செயல்படுத்த அந்தப் பணியாளர்கள் பயிற்சி பெற்றிருப்பர். ஒரு சில முக்கிய மருத்துவக் கருவிகளும் விமானத்தில் தயார்நிலையில் வைக்கப்படும்.
இருந்தபோதும் பயணி ஒருவரது நிலை, உடனடி சிகிச்சைகளும் பலனளிக்காத அளவுக்கு மோசமாகிப் போகும்போது விமானிகள் இதனைச் சமாளிக்க விமானங்களை ஆக அருகில் உள்ள விமான நிலையங்களில் தரையிறக்குவர்.