புதுடெல்லி: தமிழக ஆடவர் ஒருவர் உட்பட ஐவரை குஜராத் கடலோரக் காவல்துறை வியாழக்கிழமை அதிகாலை கைது செய்தது.
அந்த ஐவரில் மூவர் ஈரானிய மீனவர்கள்.
பொறியாளரான அசோக் குமார் ஐயப்பன், 37, என்ற அந்த இந்தியர், கடந்த சில ஆண்டுகளாக ஓமான் தலைநகர் மஸ்கட்டில் வேலைசெய்து வந்தார். அசோக்கின் சகோதரரான 35 வயது ஆனந்தும் அங்கு பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், அசோக்கிற்கு அங்கு ஆதரவளித்து வந்த நிறுவனம், அவர் பணம் தர வேண்டியிருந்ததை அடுத்து, அவரது கடப்பிதழைப் பறித்துவைத்துக் கொண்டதாகக் கூறப்பட்டது.
அங்கேயே தான் எகிப்தியப் பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டதாகவும் ஆனால் அவர் தங்களின் மகளோடு தன்னைவிட்டுப் பிரிந்துசென்றுவிட்டதாகவும் அசோக் கூறியதாகக் காவல்துறை தெரிவித்தது.
இதையடுத்து, வேறு வழியில்லாததால் படகு மூலம் கள்ளத்தனமாக இந்தியா திரும்ப அசோக் முடிவுசெய்தார்.
இதற்காக அவர் தனது ஈரானிய மருத்துவர் நண்பர் ஒருவரிடம் 8,000 ஓமான் ரியால் (ரூ.17.25 லட்சம், S$28,330) கொடுத்தார். அந்நண்பர் ஒரு செயற்கைக்கோள் கைப்பேசி, ஒரு படகு மற்றும் படகோட்டிகளை ஏற்பாடு செய்து தந்தார்.
குஜராத் கடலோரப் பகுதியில் அசோக்கைக் கரையிறக்கிவிடுவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, அசோக் கடல் வழியாக ஈரான் சென்றார். பின்னர் அங்கிருந்து ஈரானிய மீனவர்கள் மூவருடன் சேர்ந்து, ஐந்து, ஆறு நாள்களுக்குமுன் படகுமூலம் ஈரானின் ஜஸ்க் நகரிலிருந்து கிளம்பினார்.
இதனிடையே, ஆனந்த் விமானம் மூலம் குஜராத்தின் ராஜ்கோட் நகரை அடைந்து, துறைமுக நகரான ஓகாவிற்குச் சென்று, தன் அண்ணனை வரவேற்கக் காத்திருந்தார்.
இந்நிலையில், அப்படகு குறித்து குஜராத் காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனையடுத்து, சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்ட அவர்கள், ஓகா துறைமுகத்தை இணைக்கும் பாலத்திற்கு அருகே அசோக் உள்ளிட்டோர் வந்த படகை இடைமறித்து, அதிலிருந்த நால்வரையும் கைது செய்தனர்.
தன் சகோதரர் கைதானதை அறிந்து தப்பியோடிய ஆனந்தும் பின்னர் காவல்துறையிடம் பிடிபட்டார்.
சகோதரர்கள் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்கள்.
கைதானவர்களிடமிருந்து ஒரு செயற்கைக்கோள் கைப்பேசி, எட்டுக் கைப்பேசிகள், இரண்டு மடிக்கணினிகள், ஒரு ஜிபிஎஸ் கருவி, 14 பற்றட்டைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவித்தது.