அமராவதி: ஆந்திர மாநிலம் கொண்டபல்லி பகுதியில் தயாராகும் சிலைகள் உலகப்புகழ் பெற்றவை. இந்தச் சிலைகள் இந்த ஆண்டு முதல் கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி ஆக உள்ளன.
குறிப்பாக, களிமண் பிள்ளையார் சிலைகள் அதிக எண்ணிக்கையில் ஏற்றுமதியாகும் என சிற்பக் கலைஞர்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் தெலுங்கு கூட்டமைப்பினர் இந்தச் சிலைகளை அனுப்பி வைக்குமாறு கொண்டபல்லி கலைஞர்களை கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த ஆண்டு பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையையொட்டி இந்தச் சிலைகள் ஏற்றுமதி செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக சிறப்பு ஏற்பாடாக, கங்கை நதிக்கரையில் இருந்து களிமண் கொண்டு வந்து சிலைகள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏறக்குறைய மூன்று அடி வரையிலான இச்சிலைகள், சிறிய முத்து, பல வண்ணக் கற்களால் தயாரிக்கப்பட்டு, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.
ஆந்திராவுக்கு வருகைபுரியும் சுற்றுப்பயணிகள் கொண்டபல்லியில் தயாராகும் மரப்பொம்மைகளை விரும்பி வாங்குவது வழக்கம். இந்த பொம்மைகளும் அதிக எண்ணிக்கையில் ஏற்றுமதி ஆகும் எனத் தெரிகிறது.