புதுடெல்லி: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை, உப்பில் நெகிழி நுண்துகள்கள் கலந்திருப்பதாக டாக்சிஸ் லிங்க் அமைப்பு அண்மையில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அந்த அமைப்பு புதுடெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது. இந்த அமைப்புச் சார்பில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் சர்க்கரை, உப்பு மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதுதொடர்பான ஆய்வறிக்கை ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியானது.
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான அயோடின் உப்பு, கல் உப்பு, சர்க்கரை ஆகியவற்றில் நெகிழி நுண்துகள்கள் உள்ளன என்றும் இவை 0.1 எம்எம் முதல் 5 எம்எம் அளவில் காணப்படுகின்றன என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
ஒரு கிலோ தூள் உப்பான அயோடின் கலந்த உப்பில் 89.15 மைக்ரோ நெகிழித் துகள்களும் ஒரு கிலோ கல் உப்பான ஆர்கானிக் உப்பில் 6.70 மைக்ரோ நெகிழித் துகள்களும் உள்ளதாக அது தெரிவித்தது.
ஒரு கிலோ ஆர்கானிக் சர்க்கரையில், 11.85 மைக்ரோ நெகிழித் துகள்களும் 1 கிலோ ஆர்கானிக் அல்லாத சர்க்கரையில் 68.25 மைக்ரோ நெகிழித் துகள்களும் இருப்பதாகவும் அது கூறியது. உணவு, தண்ணீர், காற்று வழியாக மனித உடலுக்குள் நெகிழி நுண்துகள்கள் நுழைகின்றன. இவை மனிதர்களின் நுரையீரல், இதயம், ரத்த நாளங்கள் ஆகியவற்றில் படிவதால் நுரையீரல் பாதிப்பு, மாரடைப்பு, உடல் எடை கூடுதல், மலட்டுத்தன்மை உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என அது குறிப்பிட்டது.
ஆய்வை நடத்திய டாக்சிஸ் லிங்க் அமைப்பின் நிறுவனர் ரவி அகர்வால் கூறும்போது, “நெகிழி நுண்துகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவியல்பூர்வமாக ஆய்வு நடத்தி விரிவான அறிக்கையை வெளியிட்டு உள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

