திருச்சி: பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் வாகனப் பேரணிக்குத் தமிழகக் காவல்துறை அனுமதி தர மறுத்துவிட்டது.
தமிழ்நாட்டில் இம்மாதம் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், திருச்சி தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து, வாகனப் பேரணி மூலம் வாக்கு சேகரிக்க திரு நட்டா சனிக்கிழமை (ஏப்ரல் 6) திருச்சிக்கு வருகைபுரிவார் எனக் கூறப்பட்டது.
ஆனால், காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரையிலான பகுதியில் வணிக நிறுவனங்களும் பொதுமக்கள் நடமாட்டமும் அதிகமாக இருப்பதாலும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா இடம்பெறுவதாலும் வாகனப் பேரணிக்கு அனுமதி தர காவல்துறை மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
அத்துடன், மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுக்கும்படி காவல்துறை அறிவுறுத்தியதாகவும் தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.