மத்தியப் பிரதேசம்: மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் நடந்த வினோத சம்பவம் இது. நடந்து சென்றபோது தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியாததற்காக ஒருவருக்கு ரூ.300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பன்னாவில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அஜய்கர் காவல் நிலையப் பகுதியில் இந்த அசாதாரண சம்பவம் அரங்கேறியுள்ளது. சுஷில் குமார் சுக்லா, தனது மகளின் பிறந்தநாள் விழாவிற்கு விருந்தினர்களை அழைக்க சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, ஒரு காவல்துறை வாகனம் அவரை நிறுத்தியது.
சுக்லா, தான் வலுக்கட்டாயமாகக் காவல்துறை வாகனத்தில் ஏற்றி அஜய்கர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் சிறிது நேரம் தடுத்து வைக்கப்பட்டதாகவும் கூறினார்.
தனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வீடு திரும்ப வேண்டும் என்று அவர் விளக்கியபோது, அதிகாரிகள் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை எழுதி தலைக்கவசம் அணியவில்லை என அவருக்கு அபராதம் விதித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான சுக்லா, பன்னாவுக்குச் சென்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறை மேலதிகாரியிடம் புகார் அளித்தார்.
புகாருக்குப் பதிலளித்த காவல்துறை மேலதிகாரி, விசாரணை முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.