சென்னை: எதிர்வரும் 2029ல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என்பது தொடர்பாக தவெக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது.
ராகுல்காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்கவில்லை என்றால், தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் வெளியேறும் என்றும் தவெகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்ளும் என்றும் அக்கட்சி பகிரங்கமாக அறிவித்துள்ளது.
அண்மையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ‘இன்றைய முதல்வர் விஜய், நாளைய பிரதமர்’ என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளைத் தவெக தொண்டர்கள் ஒட்டியது காங்கிரஸ் தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது.
மேலும், 130 எம்பிக்களின் ஆதரவுடன் விஜய் பிரதமராவார் என்ற கணிப்பு குறித்த தகவல்களும் பரப்பப்பட்டு வருகின்றன.
தவெகவின் இத்தகையச் செயல்பாடுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், குமரியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சியில் பேசிய தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், தவெக தலைமைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2029 நாடாளுமன்றத் தேர்தலில் அகில இந்திய அளவிலான பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியே முன்னிறுத்தப்படுவார் என்றும் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்க உடன்படவில்லை எனில், தவெக ஆட்சியில் அங்கமாக இருக்கும் காங்கிரசின் இரண்டு அமைச்சர்களும் உடனடியாகப் பதவி விலகத் தயார் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்து சில மாதங்களே ஆன நிலையில், பிரதமர் வேட்பாளர் தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.


