போராட்டம் வெடிக்கும்: ராஜ் தாக்கரே எச்சரிக்கை

2 mins read
97e789b5-2cf7-43ad-8eb5-433d3c8f64e8
பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயமாக்கப்படுவதற்கு நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். - படம்: இந்திய ஊடகம்

மும்பை: மகாராஷ்டிர மாநிலப் பள்ளிகளில் இந்தி மொழியைக் கட்டாயமாக்குவது தொடர்பான விவகாரத்தில் எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளன.

மகாராஷ்டிராவை இந்திமயமாக்க விரும்பினால் போராட்டம் வெடிக்கும் என்று நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மகாராஷ்டிராவில் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்துப் பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு முதலே 3வது மொழிப்பாடமாக இந்தி மொழி கட்டாயமாகக் கற்பிக்கப்பட வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்பு, மும்மொழிக் கொள்கை இடைநிலைக் கல்வி முதல் அமல்படுத்தப்பட்டு வந்தது. இப்போது மராத்தி, ஆங்கில வழி பள்ளிகள் அனைத்திலும் 1ஆம் வகுப்பு முதலே இந்தி கற்பிக்க வேண்டும். மராத்தி, ஆங்கிலத்தைத் தவிர்த்து இந்தி மொழி மாணவர்களுக்கு 3வது மொழியாக இருக்கும்.

மாநில அரசின் இந்த முடிவுக்குக் கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மேலும், மகாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

“இந்தியை 5ஆம் வகுப்பு வரை கட்டாயமொழிப் பாடமாக்குவதைப் பொறுத்துக் கொள்ளமாட்டோம். அனைத்திலும் இந்தி என்ற மத்திய அரசின் முடிவை அனுமதிக்க முடியாது. இந்தி தேசிய மொழியன்று. அது நாட்டில் உள்ள மற்ற மொழிகளைப் போல் ஒரு மாநில மொழியே. அதை ஏன் மகாராஷ்டிராவில் தொடக்கக் கல்வியில் கற்பிக்க வேண்டும். நாங்கள் இந்துக்கள்தான், ஆனால் இந்திக்காரர்கள் அல்லர். மாநிலத்தை இந்திமயமாக்க விரும்பினால் போராட்டம் வெடிக்கும்,” என்று அவர் எச்சரித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்