குடியரசு தினக் கொண்டாட்டங்கள்: மூன்றாவது வரிசையில் ராகுல் காந்தி

1 mins read
f4ab070a-3b96-4aa5-af4c-6fffa7802579
குடியரசு தினக் கொண்டாட்டத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும் மூன்றாவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. - படம்: தினமணி

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் திங்கட்கிழமை (ஜனவரி 26) நடந்த குடியரசு தினக் கொண்டாட்டத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும் மூன்றாவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.

முதலிரண்டு வரிசையில் மத்திய அமைச்சர்களும் அவர்களின் குடும்பத்தினரும் அமர்ந்திருந்தனர்.

கடந்த 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி, அந்த ஆண்டின் சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டபோது அவருக்கு கடைசியில் இருந்து இரண்டாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது.

ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரர்களுக்கு மத்தியில் ராகுல் காந்தி அமரவைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகவும் பிரதமருக்கு அடுத்த பொறுப்பிலும் இருக்கும் ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர்களுக்கு நிகரான மரியாதைகூட வழங்கப்படவில்லை என்று கண்டனம் எழுந்துள்ளது.

கடந்தாண்டு செங்கோட்டையில் நடைபெற்ற குடியரசு தினம், சுதந்திர தின விழாக்களில் கலந்துகொள்ளாமல், காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற விழாக்களில் மட்டும் ராகுல் காந்தி பங்கேற்றார்.

இவ்வாண்டுக் குடியரசு தின நிகழ்வில் கார்கே, ராகுலுக்கு மீண்டும் பின்வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்