ஹைதராபாத்: தெலுங்கானா நிலம், ஆய்வுத் துறையின் துணை இயக்குநரான சுன்கரி நரஹரிக்குச் சொந்தமான இடங்களில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் பேரில் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திங்கட்கிழமையன்று (ஜூன் 15) அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையில், ஹைதராபாத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏறத்தாழ 12 இடங்களில் அதிகாரிகள் ஒரே நேரத்தில் ஆய்வுகளை மேற்கொண்டனர். சத்ரிநாகா பகுதியில் உள்ள நரஹரியின் இல்லம், நாராயணகுடாவில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் அவரது உறவினர்கள், நெருங்கிய நண்பர்களின் வீடுகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.
நரஹரியின் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட ரூ.32 லட்சம் ரொக்கம், பேரளவிலான தங்க நகைகள், வங்கி கணக்கு ஆவணங்கள் மற்றும் அசையா சொத்துகளுக்கான பத்திரங்கள் ஆகியவற்றை புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், அவர் தனது வருமானத்துக்கு புறம்பாக சொத்து மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளின் முழுமையான மதிப்பு, விசாரணை முழுமையாக நிறைவடைந்த பின்னரே தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

