மாநிலங்களவைத் தேர்தல்: காங்கிரசுக்கு இடம் ஒதுக்கிய தவெக

மாநிலங்களவைத் தேர்தல்: காங்கிரசுக்கு இடம் ஒதுக்கிய தவெக

1 mins read
7c29e4d9-942c-49e1-a662-0a433f246991
தவெக எளிதில் வெற்றி பெறக்கூடிய மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை காங்கிரசுக்கு ஒதுக்கியுள்ளதாக முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார். - கோப்புப் படம்: இந்து தமிழ் திசை

சென்னை: எதிர்வரும் ஜூன் 18ஆம் தேதி நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஓர் இடம் ஒதுக்கப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் அமைச்சர்கள் இருவர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், தவெக எளிதில் வெற்றி பெறக்கூடிய மாநிலங்களவை உறுப்பினர் இடத்தைக் காங்கிரசுக்கு ஒதுக்கியுள்ளதாக அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம், தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, அரசியல் நிலவரங்கள் குறித்தும் தமிழக அரசியல் குறித்தும் இருவரும் பேசியதாகத் தகவல் வெளியானது.

எனினும், மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்குமாறு தவெகவிடம் கோரிக்கை வைக்கப்படும் எனத் தமிழக காங்கிரஸ் மேலிடப் பார்வையாளரான கிரிஷ் சோடங்கர் தெரிவித்திருந்தார்.

இதற்கேற்ப, புதன்கிழமை முதல்வர் விஜய் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை ஏற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் மாநிலங்களவை எம்.பி.க்கள் 24 பேரின் ஆறு ஆண்டு பதவிக் காலம் 2026 ஜூன், ஜூலை மாதங்களில் முடிவடைகிறது. இதனால் அந்த இடங்களுக்கு ஜூன் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழகச் சட்டமன்றத் தேர்தலையொட்டி, சி.வி. சண்முகம் உள்ளிட்ட மூன்று பேர் தங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.

எனவே, அந்த மூன்று இடங்களுக்குத் தற்போது அறிவித்துள்ளபடி இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.

குறிப்புச் சொற்கள்
காங்கிரஸ்தவெகமுதல்வர்விஜய்எம்.பி.தேர்தல்