புதுடெல்லி: அரிய வகை மண்டை ஓடு எலும்பு காசநோயால் பாதிக்கப்பட்ட, டெல்லியைச் சேர்ந்த நோயாளியை ஆறு அறுவை சிகிச்சைகள் மூலம் இயல்புநிலைக்குத் திரும்ப வைத்துள்ளனர் மருத்துவர்கள்.
53 வயதான அந்த நோயாளி, மூளை ரத்தப்போக்கு காரணமாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, டெல்லி ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அரை மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு அவசரக் கால மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மூளையில் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்க மண்டை ஓட்டின் ஒரு பகுதி தற்காலிகமாக அகற்றப்பட்டு, பின்னர் அது எலும்பு வங்கியில் பாதுகாக்கப்பட்டது.
இந்நிலையில், பாதுகாக்கப்பட்ட எலும்பை மீண்டும் வைக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும், சிகிச்சைக்குப் பின் மிகவும் அரிதாக ஏற்படும் மண்டை ஓடு எலும்பு காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மேலும், இது மூளை, தண்டுவடப் பகுதிகளுக்கும் பரவியது.
சிகிச்சையின்போது ஏற்பட்ட வலிப்பு, தொடை எலும்பு முறிவு, மருந்துகளின் பக்கவிளைவால் ஏற்பட்ட பார்வைக் குறைபாடு எனப் பல தடங்கல்களைச் சிறப்பு மருத்துவக் குழு திறம்படக் கையாண்டது.
இறுதியில், அவருக்குச் செயற்கை மண்டை ஓடு ஒன்றைப் பொருத்தினர் மருத்துவர்கள். அதன் பின்னர், தொடர் மறுவாழ்வு சிகிச்சைகள் மூலம் அவர் முழுமையாகக் குணமடைந்துள்ளார்.
இதற்கு, 12க்கும் மேற்பட்ட மருத்துவத்துறை வல்லுநர்களின் கூட்டு முயற்சி தேவைப்பட்டது.


