ஹைதராபாத்: ஐஎஸ்ஐஎஸ் , அல்கொய்தா தீவிரவாத அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வந்தவராக நம்பப்படும் சயீதா பேகம், 38 என்பவரைக் காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சஞ்சல்குடா பகுதியைச் சேர்ந்த அவர், கடந்த மார்ச் 25ம் தேதி விஜயவாடா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
‘கவாத்தீன்’ என்ற பெயரில் பெண்களுக்கான தனி தீவிரவாதப் பிரிவைத் தொடங்கி, அதில் 42 பெண்களைச் சேர்த்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களுக்கு துப்பாக்கி சுடுதல், வெடிகுண்டுகளைக் கையாளுதல் போன்ற பயிற்சிகளை அளித்து, இந்தியா முழுவதும் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்தது.
ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சயீதா பேகம், முகமது ரஹமத்துல்லா ஷெரீப் உள்ளிட்ட ஐவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இவர்களுடைய கைப்பேசிகளில் இருந்து அழிக்கப்பட்ட தகவல்களை தடய அறிவியல் நிபுணர்கள் மீட்டெடுத்துள்ளனர். அதில், பாகிஸ்தான் மத போதகர் இஸ்ரார் அகமது, ஜாகிர் நாயக் ஆகியோரின் தீவிரவாத உரைகள், வெடிகுண்டு தயாரிக்கும் முறைகள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.
மேலும், ‘பென்க்ஸ்’ என்ற இணையக்குழு மூலம் இளைஞர்களை மூளைச்சலவை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கும்பலுக்கு டெல்லி, மேற்கு வங்காளம், கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சீஷன் , 19 என்ற வாலிபரையும், கர்நாடகாவின் பல்லாரியில் அப்துல் சலாம் என்பவரையும் காவல்துறை கைது செய்துள்ளது.
வெளிநாட்டவரான அல்-ஹக்கீம் ஷுக்கூர் என்பவருடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பதால், இந்த வழக்கை என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற காவல்துறை முடிவு செய்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கணவரால் கைவிடப்பட்ட நிலையில், தனது ஆறு வயது மகனையும் முதிய பெற்றோரையும் காப்பாற்ற வீட்டு வேலை செய்து வந்த சயீதா பேகம், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டகிராம், வாட்ஸ்அப் மூலம் தீவிரவாதக் கும்பலுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டுள்ளதாகக் கூறப்பட்டது. அவரை இன்ஸ்டகிராமில் 38,000 பேர் பின்தொடர்கின்றனர்.
தமது சம்மதம் இல்லாமலேயே அந்தக் குழுக்களில் சேர்க்கப்பட்டதாகக் கூறிய சயீதா பேகம், தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையில்லை’ என்று கூறினார்.
தற்போது அறுவர் காவலில் உள்ள நிலையில், ஏழு மாநிலங்களில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

