ஹைதராபாத்: ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மின்கம்பங்களில் உள்ள கம்பிவடங்கள் அகற்றப்படுகின்றன.
தெலுங்கானா உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கம்பிவடங்களை அகற்றும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்துத் தமிழ் திசை இந்தத் தகவலை வெளியிட்டது.
அண்மையில் தெலுங்கானா மாநிலத்தின் ராமந்தபூர் பகுதியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற தேர்த்திருவிழாவின்போது மின்சாரம் தாக்கி ஆறு பேர் மரணமடைந்தனர்.
மின்கம்பங்களில் சுற்றிக்கொண்டிருந்த கம்பிவட, இணைய மின்கம்பிகள் உரசியபோது மின்சாரம் பாய்ந்தது. அதில் சிக்கி அவர்கள் பலியாயினர்.
சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கம்பிவட, இணையச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்பது அதில் தெரியவந்தது.
அதன் பிறகு, மின்கம்பங்களில் அனுமதியின்றிச் சுற்றப்பட்டுள்ள கம்பிவடங்களை அகற்றுமாறு தெலுங்கானா அரசாங்கத்துக்கு உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
பார்தி ஏர்டெல் நிறுவனம் அதற்கு இடைக்காலத் தடை விதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. உயர் நீதிமன்றம் அதனை நிராகரித்துவிட்டது.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஹைதராபாத்திலும் தெலுங்கானாவிலும் அனுமதியில்லாமல் மின்கம்பங்களில் சுற்றப்பட்ட கம்பிவடங்களை ஊழியர்கள் அகற்றிவருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திராவிலும் திருப்பதி உட்பட பல நகரங்களில் அத்தகைய கம்பிவடங்களை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உள்ளன. அவற்றுள் சுமார் 175,000 மின்கம்பங்களுக்கு மட்டுமே அனுமதி பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


