புதுடெல்லி: சீன விமான நிலையங்கள் வழியாக இடைவழிப் பயணம் மேற்கொள்ளும் இந்தியக் குடிமக்கள் குறிவைக்கப்பட்டு முறையில்லாமல் தடுக்கப்படவோ தொல்லை கொடுக்கப்படவோ மாட்டார்கள் என உறுதிசெய்யும்படி அந்நாட்டிடம் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
விமான நிலையத்தில் இந்தியக் குடிமகன் ஒருவரைக் காரணமின்றித் தடுத்ததாகக் கூறும் இந்தியா, அதன் தொடர்பில் தனது கடும் எதிர்ப்பைச் சீனாவிடம் தெரிவித்தது.
இந்தியக் கடப்பிதழைக் கொண்டுள்ள பிரிட்டிஷ் பெண், இடைநிலைச் சேவையின்போது அதிகாரிகளால் தடுக்கப்பட்டார். அருணாசலப் பிரதேசத்தில் பிறந்ததால் அவரது கடப்பிதழ் செல்லுபடியாகாது என்று அந்த அதிகாரிகள் தம்மிடம் தெரிவித்ததாகத் திருவாட்டி பிரேமா கூறினார்.
ஜப்பானை நோக்கிச் செல்லும் விமானச் சேவை ஒன்றுக்காகக் காத்திருந்த அவரை விமானத்தில் ஏறவிடமால் அதிகாரிகள் தடுத்தனர். விமான நிலையத்தில் அவர் 18 மணி நேரத்திற்கு மேல் தடுத்து வைக்கப்பட்டார்.
அருணாசலப் பிரதேசத்தை ஸாங்னான் என அழைக்கும் சீனா, அப்பகுதியைத் தென் திபெத் நிலப்பகுதியாகக் கருதி சொந்தம் கொண்டாடுகிறது.
இதுபோன்ற செயல்கள், நட்புறவைக் குலைக்கும் விதமாக இருப்பதாகப் புதுடெல்லி கூறுகிறது.

