புதுடெல்லி: வெங்காயம் மீதான 20 விழுக்காடு ஏற்றுமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார், மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
“மகாராஷ்டிராவின் நாசிக் பகுதியில் விளையும் வெங்காயம் நாட்டின் பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.
“தற்போது இருப்பு வைக்கப்பட்டுள்ள வெங்காயம் சந்தைக்கு பெருமளவு வருவதாலும் குறைந்தபட்ச ஆதரவு விலை இல்லாததாலும் அதனை மிகக் குறைந்த விலைக்கு விவசாயிகள் விற்க வேண்டியுள்ளது. ஏற்றுமதி வெங்காயம் மீது 20 விழுக்காடு வரி விதிக்கப்படுவதால் அனைத்துலகச் சந்தையில் இந்திய விவசாயிகளால் போட்டியிட முடியவில்லை. எனவே 20 விழுக்காடு ஏற்றுமதி வரியை ரத்து செய்ய வேண்டும்,” என்று கடிதத்தில் திரு அஜித் பவார் வலியுறுத்தியுள்ளார்.