ஒடிசா ரயில் விபத்திற்குத் தொழில்நுட்பக் கோளாறு தான் முக்கிய காரணம் என்று இந்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.
ரயில்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் கட்டமைப்பு ஒழுங்காக இயங்காமல் போனதால் அந்த பெரும் விபத்து ஏற்பட்டதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
கட்டமைப்பு ஒழுங்காக இயங்காமல் போனதற்கு என்ன காரணம், இதை கவனிக்காமல் விட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். விபத்து குறித்து மேலும் சில முக்கிய விவரங்கள் விசாரணையின் முடிவில் வெளியிடப்படும் என்றும் வைஷ்னவ் கூறினார்.
வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டத்தில் ரயில் விபத்து ஏற்பட்டது.
கோல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூரில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்ற அதிவிரைவு ரயிலுடன் மோதிக்கொண்டது.
விபத்து நடக்கும் போது இரண்டு ரயில்களிலும் கிட்டத்தட்ட 2,500 பயணிகள் இருந்தனர். அதில் 288 பேர் மாண்டனர், கிட்டத்தட்ட 700 பயணிகள் காயமடைந்தனர். 56 பேருக்கு கடுமையாக காயங்கள் ஏற்பட்டுள்ளன.
விபத்து நடந்த இடத்தை அதிகாரிகள் இரவு பகல் பாராமல் சீரமைத்து வருகின்றனர். இந்த பெரும் விபத்தால் இந்திய ரயில் போக்குவரத்தில் நெருக்கடியும் எழுந்துள்ளது, சில சிறப்பு ரயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.