ஹைதராபாத்: தெலுங்கானா சட்டமன்றக் கூட்டத்தொடரில் இருந்து பாரத ராஷ்டிர சமிதி (BRS) கட்சியைச் சேர்ந்த சட்ட மேலவை உறுப்பினர்கள் (MLC) டாடா மது, நவீன் குமார் ரெட்டி ஆகியோர் சட்ட மேலவையின் எஞ்சிய கூட்டத்தொடர் முழுவதிலிருந்தும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சபாநாயகர் கடம்பிரசாத் குமாருக்கு எதிராக அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசிய குற்றச்சாட்டின் பேரில் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற வளாகத்திற்குள் மூன்றாவது வாயில் அருகே சபாநாயகர் கடம்பிரசாத் குமாருக்கு எதிராக இருவரும் அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் சட்டமன்ற உறுப்பினர்களின் கண்ணியத்திற்கும் அவை மரபுகளுக்கும் கடும் அச்சுறுத்தலாக அமைந்ததாகக் கூறி, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தாமோதர் ராஜா நரசிம்மா சட்டப்பேரவையில் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்தார்.
இதனைத் தொடர்ந்து, மேலவைத் தலைவர் குத்தா சுகேந்தர் ரெட்டி, குறிப்பிட்ட உறுப்பினர்கள் இருவரையும் நடப்புக் கூட்டத்தொடரின் எஞ்சிய காலம் முழுவதற்கும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

