பெங்களூரு: கர்நாடகாவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வெளிநாட்டினரைக் கண்டுபிடிக்க மாநிலம் தழுவிய சிறப்பு தேடுதல் வேட்டையை நடத்த காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவில் பங்ளாதேஷ் குடிமக்கள் 20 லட்சம் பேர் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாக சிலர் கூறுகிறார்கள் என்றும் தங்களிடம் உள்ள ஆவணங்களின்படி இதுவரை 270 பேர்களை மட்டுமே பங்ளாதேஷுக்கு நாடுகடத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எத்தனை பேர் என்ற எண்ணிக்கையைவிட சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரைக் கண்டறிந்து அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டியது அரசின் கடமை என்றார் அவர்.
பெங்களூருவில் செயல்பட்டு வரும் வெளிநாட்டினர் மண்டல அலுவலகம் அளித்துள்ள தகவல்களின்படி, அங்கு அதிகமான வெளிநாட்டினர் தங்கியிருப்பதாகத் தெரியவில்லை என்றார் அமைச்சர் பரமேஸ்வரா.
சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை கண்டுபிடிக்க மாநிலம் முழுவதும் சிறப்பு தேடுதல் முகாம்களை நடத்த காவல்துறைக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
கர்நாடகாவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள பங்ளாதேஷ் குடிமக்களின் எண்ணிக்கை குறித்து பலவிதமான தரவுகள் உள்ளன என்றும் விரைவில் மாநில அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு புதிய பலன் கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

