புதுடெல்லி: இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவிவிலகக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து சனிக்கிழமை (ஜூலை 18) காலை அவர் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையின்படி அத்தியாவசிய மருத்துவச் சிகிச்சைக்காக சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்தது.
“சோனம் வாங்சுக் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சுயநினைவுடன் இருக்கிறார். அவரது உடலின் முக்கிய அவயங்களின் செயல்பாடுகள் சீராகவே இருக்கிறது,” என்று சாஃப்டர்ஜங் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 21 நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் அவரை, உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுமாறு அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதே நிலை தொடர்ந்தால் அவரின் உயிருக்கே ஆபத்து என்று மருத்துவர்கள் எச்சரித்தனர். அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியது.
இந்நிலையில் காவல் துறையினர் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.
இச்செயலைக் கண்டித்து போராட்டத்தை முன்னெடுத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தொண்டர்கள், இடதுசாரி மாணவர் அமைப்பினர், ஆதரவாளர்கள் ஆகியோர் முழக்கங்களை எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள், ஆதரவாளர்களும் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர். தடுப்புக் காவலில் கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் ட்டமிட்டபடி, ஜூலை 20 ஆம் தேதியில் பேரணி நடைபெறும் என்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே அறிவித்திருந்தார்.
எதிர்க்கட்சிகள் கண்டனம்
போராட்டக் களத்திலிருந்தவர்களைக் கைது செய்ய காவல்துறையினர் முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அந்த நடவடிக்கைக்குப் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அமைதியான முறையில் நடைபெற்று போராட்டம் காவல் துறையினரால் கலைக்கப்பட்டதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் எம் ஏ பேபி கண்டனம் தெரிவித்துள்ளார்.
லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை தொடர்ந்து அழித்து வரும் அமைப்பை சீரமைப்பதையோ, வினாத்தாள்கள் கசிவு போன்ற சம்பவங்கள் யாரின் தலைமையின் கீழ் நடந்ததோ அந்த கல்வி அமைச்சரைப் பதவி நீக்கம் செய்யாமல், அமைதியான முறையில் போராடியவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது
இது மோடி அரசின் சர்வாதிகாரத்தை வெளிக்காட்டியுள்ளது. மாற்றுக்கருத்துக்களை ஒடுக்குவது பொறுப்புக்கூறல்களுக்கு மாற்றாக அமையாது என்று அவர் கூறியுள்ளார்.
தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில், டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 28 நாட்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன.

