திருப்பதி: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் மனைவி அன்னா லெஸ்னவா திருப்பதியில் தலைமுடிக் காணிக்கை செலுத்தினார்.
மேலும் அவர் அன்னதானத்துக்கு ரூ.17 லட்சம் நன்கொடையாகவும் வழங்கினார்.
கடந்த வாரம் திரு பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர் படித்த பள்ளியில் தீச்சம்பவம் ஏற்பட்டது. அதில் மார்க் சங்கர் உட்படப் பலர் தீக்காயமடைந்தனர். ஒரு மாணவி உயிரிழந்தார்.
இச்சம்பவம் சிங்கப்பூரில் நிகழ்ந்தது. இந்தத் தகவலை அறிந்ததும் பவன் கல்யாண், சிங்கப்பூர் சென்று தனது மகனை அங்கிருந்து இந்தியாவுக்கு அழைத்து வந்தார்.
தற்போது ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் மார்க் சங்கர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சூழலில் பவன் கல்யாணின் மனைவியான அன்னா லெஸ்னவா ஹைதராபாத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13) திருப்பதி வந்தார்.
ரஷ்யாவைச் சேர்ந்த அவர் வேற்று மதத்தைச் சார்ந்தவர் என்பதால், தனக்கு ஏழுமலையான் மீது நம்பிக்கை உள்ளது என்று திருப்பதி தேவஸ்தானப் பதிவேட்டில் கையெழுத்திட்டார். அதன் பின்னர், தலைமுடி காணிக்கை செலுத்தினார்.
பின்னர் திங்கட்கிழமை (ஏப்ரல் 14) காலை ஏழுமலையானை வழிபட்டுப் பக்தர்களுக்கு வழங்கும் இலவச அன்னதானத் திட்டத்துக்கான முழு செலவையும் அவர் ஏற்றுக் கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
அதற்காக ரூ.17 லட்சத்துக்கான காசோலையைத் தேவஸ்தான அதிகாரிகளிடம் அன்னா லெஸ்னவா வழங்கினார். பின்னர் அவரே பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினார்.
தன்னுடைய இளைய மகன் மார்க் சங்கர் தீ விபத்தில் உயிர் தப்பினார் என்றும், இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், விரைவில் குணமாக வேண்டியும் திருப்பதி ஏழுமலையானை மனதார வேண்டிக் கொண்டதாக அன்னா லெஸ்னவா தெரிவித்தார்.