போக்சோ வழக்கில் மத்திய அமைச்சர் மகன் கைது

போக்சோ வழக்கில் மத்திய அமைச்சர் மகன் கைது

1 mins read
de9cc688-b8d3-440a-adf2-d38bbb663f93
மகன் பந்தி பாகீரத்துடன் அமைச்சர் பந்தி சஞ்சய் குமார். - கோப்புப் படம்: தினமணி

ஹைதராபாத்: மத்திய அமைச்சர் பந்தி சஞ்சய் குமாரின் மகன் பந்தி பாகீரத், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைக்காகச் சனிக்கிழமை (மே 16) காவல் நிலையத்தில் முன்னிலையானபோது அவர் கைது செய்யப்பட்டதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

17 வயதாகும் சிறுமியுடன் பந்தி பாகீரத் நெருக்கமாகப் பழகியதாகவும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது. சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் பந்தி பாகீரத்மீது போக்சோ வழக்குப் பதிவானது.

இதையடுத்து, முன்பிணை கோரி அவர் தாக்கல் செய்த மனு தெலுங்கானா உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனிடையே, சிறுமியும் அவரது குடும்பத்தாரும் தம்மிடம் நெருக்கம் பாராட்டியதாகவும் சிறுமியைத் திருமணம் செய்யாவிட்டால் வழக்குத் தொடுக்கப்போவதாக மிரட்டியதாகவும் பாகீரத் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், காவல்துறை விசாரணைக்காகத் தமது மகனை வழக்கறிஞர்களின் துணையோடு அனுப்பி வைத்ததாக மத்திய இணை அமைச்சர் பந்தி சஞ்சய் குமார் கூறியுள்ளார்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும் நீதித்துறை மீது தமக்கு நம்பிக்கை உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, விசாரணைக்கு முன்னிலையான பந்தி பாகீரத் கைது செய்யப்பட்டதாகத் தெலுங்கானா காவல்துறை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்