சென்னை: தமிழகத்திலிருந்து இயக்கப்பட்ட அனைத்து விமானச் சேவைகளையும் முற்றிலும் நிறுத்துவதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏற்கெனவே குறைந்த அளவிலான விமானங்களை மட்டுமே தமிழகத்தில் இருந்து இயக்கப்பட்ட நிலையில், அந்நிறுவனம் இந்தப் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் ஸ்பைஸ்ஜெட் விமானச் சேவையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மதுரை, கோவை விமான நிலையங்களில் இருந்து இந்திய நகரங்களுக்கு அன்றாட விமானங்களை ஸ்பைஸ்ஜெட் இயக்கி வந்தது.
மும்பை, டெல்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், அந்தச் சேவைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தன.
சென்னையிலிருந்து கர்நாடக மாநிலம் ஷிமோகாவிற்குப் பெயரளவுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், ஒட்டுமொத்தமாக அனைத்துச் சேவைகளையும் நிறுத்தியுள்ளது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்.
முன்னதாக, மதுரையில் இருந்து துபாய்க்கு இயக்கப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் நான்கு மாதங்களுக்குமுன் நிறுத்தப்பட்டது.
அந்நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்த பயணிகள் ஆர்வம் காட்டியபோதும் வழித்தடங்களை மேம்படுத்த ஸ்பைஸ்ஜெட் ஆர்வம் காட்டவில்லை என ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகக் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்ட நிலையில், அந்நிறுவனத்தின் சொந்த பயன்பாட்டில் இருந்த விமானங்களின் எண்ணிக்கையும் குறைந்தது.
அதனால், லாபம் குறைவாக உள்ள, செயல்பாட்டுச் செலவு அதிகமாக உள்ள வழித்தடங்களில் விமானங்களை இயக்காமல் சேவையை அந்நிறுவனம் கைவிட்டது.

