மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி (S$34 பில்லியன்) உபரி நிதியை வழங்க இந்தியாவின் ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. முன்னாள் ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மத்திய அரசுக்கு வருமானம் குறைந்துள்ள நிலையிலும் தங்கப் பத்திரம் மீது எதிர்பார்த்த வருமானம் குறைந்த நிலையிலும் ஆர்பிஐ வழங்கும் பணம் பொருளியலை மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளியல் மந்தநிலை, வாகனத் தொழில்துறையில் பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழப்பு போன்றவை நிகழ்ந்துள்ள இந்தச் சூழலில் ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்குப் பணம் வழங்குகிறது.
ரிசர்வ் வங்கியின் வசம் ரூ.9.6 லட்சம் கோடி உபரி நிதி உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இந்த உபரி நிதியில் இருந்து ரூ. 1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டுக்கான ரிசர்வ் வங்கியின் உபரி நிதியான 1,23,414 கோடி ரூபாய் மற்றும் திருத்தப்பட்ட பொருளாதார முதலீட்டு கட்டமைப்பின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ள உபரித் தொகை 52,637 கோடி ரூபாய் என மொத்தம் 1,76 ஆயிரம் கோடி ரூபாய் உபரித் தொகை மத்திய அரசுக்கு வழங்கப்படவுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், திங்கட்கிழமை நடந்த ஆர்பிஐ மத்தியக் குழுக் கூட்டத்தில் ஜலான் குழுவின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் உபரி நிதியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் வெளியான சில தகவல்களின்படி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 விழுக்காடு பற்றாக்குறை இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், ரிசர்வ் வங்கி வழங்கும் உபரி நிதி இந்த பற்றாக்குறையைச் சமாளிக்க உதவும் என்று கருதப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை மத்திய அரசு பெறுவதற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“பிரதமருக்கும் நிதியமைச்சருக்கும், அவர்கள் உருவாக்கிய பொருளாதாரப் பேரழிவை எப்படி சரிசெய்வது என்பது தெரியவில்லை. ரிசர்வ் வங்கியின் பணத்தைத் திருடி பொருளாதாரப் பேரழிவுக்கு பயன்படுத்துவது பயனற்றது. இது மருந்தகத்தில் பிளாஸ்டர் திருடி குண்டு காயத்திற்கு ஒட்டுவது போன்றதாகும்,” என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ஆர்பிஐ அமைப்பில் இப்படி திருடுவது நம்முடைய பொருளாதாரத்தை மேலும் மோசமாக்கும், வங்கிகளின் கடன் கொடுக்கும் திறனும் குறையும் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவிற்கு பொருளாதார வல்லுனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள். “தற்காலிகமாக பொருளாதார தேவையைச் சரிக்கட்ட இது உதவும். ஆனால் நீண்டகாலப் போக்கில் இது வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தும்,” என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
“முதலில் முன்னாள் ஆர்பிஐ ஆளுநர்கள் ரகுராம் ராஜனும், ஊர்ஜித் பட்டேலும் மத்திய அரசு பணம் கேட்டபோது அதைத் தீவிரமாக மறுத்து வந்தனர். அவர்கள் நீக்கப்பட்டு அதன்பின் எம்ஏ வரலாறு படித்த சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டார். தற்போது அவர் தனது பணியைச் செய்துவிட்டார்,” என்று மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.