சந்தைக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய மனைவி, தம் கணவர் விரைவிலேயே வீடு திரும்பியதோடு நில்லாது அவரே இரவு உணவு சமைத்ததைக் கண்டும் பெரும் வியப்படைந்தார்.
ஆனால், அவர் என்ன சமைத்துள்ளார் என்பதைக் கண்டதும் அவருக்குக் குமட்டிக்கொண்டு வர, அஞ்சி, அலறியடித்துக்கொண்டு அவ்விடத்தைவிட்டு ஓடினார்.
காரணம், தட்டில் மனிதக் கையும் விரல்களும் இருந்ததுதான்.
இந்தச் சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் அருகேயுள்ள டிக்கோபூர் எனும் சிற்றூரில் நிகழ்ந்தது.
அந்தப் பெண்ணின் 32 வயது கணவரான சஞ்சய் ஒரு குடிகாரர் எனக் கூறப்படுகிறது.
எப்படியோ அருகில் இருக்கும் சுடுகாட்டில் இருந்து ஒரு மனிதக் கையை அவர் நெகிழிப் பையில் போட்டு வீட்டிற்கு எடுத்து வந்துவிட்டார்.
கணவரின் செய்கை குறித்து அக்கம்பக்கத்தாரிடம் கூறிவிட்டு, நேரே போலிசிடம் சென்றார் அந்தப் பெண். போலிஸ் வரும் வரை வீட்டைப் பூட்டிக்கொண்டு உள்ளேயே இருந்தார் சஞ்சய்.
இதுபற்றி ஆர்.சி.சர்மா என்ற போலிஸ் அதிகாரி கூறுகையில், “சஞ்சயின் வீட்டில் மனிதக் கறி இருந்ததைக் கண்டோம். அவரைக் கைது செய்துவிட்டோம். விசாரித்ததில், கங்கைக் கரையோரம் இருந்து அந்தக் கையை எடுத்து வந்ததாக அவர் கூறினார்,” என்றார்.
இதனிடையே, அச்சம் அகலவில்லை என்பதால் சஞ்சய்யின் மனைவி இன்னும் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
#மனிதக் கை