இந்தியா-சீன எல்லையில் பதற்றத்தை தணிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று (ஜூன் 15) இரவு இரு தரப்பு படைகளுக்குமிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.
இதில் இந்திய ராணுவத்தின் தரப்பில் ஒரு அதிகாரி, இரண்டு வீரர்கள் என மூவர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த வீரர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த பழனி. வயது 40.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி, கடந்த 22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார். அவரது மரணத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு லடாக் பகுதியில் எல்லைப் பிரச்சினை காரணமாக கடந்த மாதம் 5ஆம் தேதி இந்திய படைகளும், சீன படைகளும் மோதிக்கொண்டன.
கடந்த 6ஆம் தேதி, இந்தியா-சீனா ராணுவ உயர் அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், இணக்கம் காணப்பட்டதையடுத்து, எல்லையில் இரு நாட்டு படைகளும் பின்வாங்கிச் சென்றன.
இந்நிலையில், லடாக் எல்லைப்பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு இந்தியா-சீன படைகள் இடையே மீண்டும் பலத்த மோதல் வெடித்தது. அதில் இரு தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இரு நாடுகளும் தங்கள் நாட்டு எல்லைப் பகுதிக்குள் மற்றது ஊடுருவி இருப்பதாகக் குற்றம் சாட்டுகின்றன. இந்நிலையில், இந்தியா உடன்பாடுகளை மதித்து நடக்க வேண்டும் என்றும் சண்டைக்கு பயப்படவில்லை என்றும் சீனா தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு 1962ஆம் ஆண்டு எல்லை பிரச்சினை தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே போர் மூண்டது குறிப்பிடத்தக்கது.
இந்திய தரப்பில் மூவர் உயிரிழந்துள்ள நிலையில், எல்லைப்பகுதியில் அமைதியை ஏற்படுத்த இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online