இந்தியாவும் சீனாவும் அமைதியை விரும்புவதாகக் கூறினாலும் எல்லைப் பிரச்சினையில் இரு நாடுகளுக்கு இடையே லடாக் பகுதியில் நடந்த சண்டையில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்ததாக் இந்தியா தெரிவித்துள்ளது.
சீனாவின் தரப்பிலும் உயிரிழப்பு இருப்பதாகக் கூறப்பட்டாலும் சீனா அது குறித்த அதிகாரபூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை. ஆனால், சீனா தரப்பில் மூத்த ராணுவ அதிகாரி உட்பட 35 பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில், “இந்தியா யாரையும் சீண்டவில்லை; நமது வீரர்களின் தியாகம் வீண் போகாது. நாட்டின் ஒருமைப்பாடு மிகவும் முக்கியமானது. இந்தியா அமைதியை விரும்புகிறது; தேவை ஏற்பட்டால் தக்க பதிலடி கொடுக்கும் திறன் உள்ளது,” என்று தமது தொலைக்காட்சி உரையில் இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தைத் தணிக்க இரு தரப்புகளையும் சேர்ந்த அதிகாரிகள் அணுக்கமாக பேச்சுவார்த்தை நடத்துவதாக சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஸாவோ லிஜியன் கூறியுள்ளார்.
இந்திய வீரர்கள் எல்லை தாண்டியதாகவும் ,சட்ட விரோதமாக நடந்துகொண்டதாகவும் சீண்டி, தாக்குதல் நடத்தியதாகவும் குறிப்பிட்ட திரு ஸாவோ, அதன் காரணமாக இரு தரப்பு வீரர்களுக்கும் இடையே சண்டை மூண்டதாக செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
எல்லைப் பகுதியில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவியதாக இந்திய தரப்பில் கூறப்பட்டது.
சீனப் படைகள், கல்வான் பள்ளத்தாக்கில் ஆணிகள் பதிக்கப்பட்ட ஆயுதங்கள், கற்கள் போன்றவற்றைக் கொண்டு தாக்கியதாக இந்திய தரப்பில் கூறப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை இரவு, இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் முறைகள் பற்றி இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சு வார்த்தைகள் நடத்திக்கொண்டிருந்தபோது இந்திய ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரி முதலில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து காயமடைந்த பல இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த சண்டை பற்றி சீன தரப்பில் விரிவான செய்திகள் வெளியாகவில்லை. ஆனால், போரில் இறங்கத் தயக்கம் இல்லை என்று சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் சீன தரப்பின் ஒருதலைப்பட்சமான செயல்பாடே தற்போது வெடித்துள்ள மோதலுக்கு காரணம் என இந்திய வெளியுறவு அமைச்சு சாடியுள்ளது. இந்த திடீர் மோதலுக்கு அமைதிப் பேச்சு மூலம் தீர்வு காணவேண்டும் என அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. சுமார் 45 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய, சீன ராணுவங்கள் இடையிலான மோதலில் முதன்முறையாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
எல்லையில் பதற்றம் நிலவும் சூழ்நிலையில், அதுகுறித்து ஆலோசிக்க வரும் 21ம் தேதி இந்திய அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online