எல்லையில் பதற்றமான பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக்கொள்ள இந்தியாவும் சீனாவும் ஒத்துக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ராணுவ உயர்மட்ட அளவில் இடம்பெற்ற 11 மணி நேரப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இம்மாதம் 15ஆம் தேதி இரவு கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு வீரர்களும் பல மணி நேரமாக மோதிக் கொண்டனர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் மரணம் அடைந்தனர்; 70க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.
அதுபோல, சீனத் தரப்பிலும் உயிருடற்சேதம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டாலும் அதன் தொடர்பில் சீனா எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. மோதலில் குறைந்தது 40 சீன வீரர்கள் பலியாகி இருக்கலாம் என இந்திய ஊடகங்களில் வெளியான செய்தியை ‘பொய்ச் செய்தி’ என சீனா மறுத்துவிட்டதாக ‘பிடிஐ’ செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த மோதலுக்குக் காரணம் என இரு நாடுகளும் ஒன்றை ஒன்று மாறி மாறி குற்றம் சாட்டின.
அத்துடன், கல்வான் பள்ளத்தாக்கு தனக்குச் சொந்தமானது என சீனா கூறி வருகிறது. ஆனால், அது உண்மையல்ல எனக் கூறி, இந்தியா அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
இத்தகைய சூழலில், எல்லையில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் பொருட்டு இந்திய ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங், சீனாவின் ராணுவ ஜெனரல் மேஜர் லியு லின் ஆகியோரிடையே இரு நாட்களாகப் பேச்சுவார்த்தை நடந்தது.
நேற்று (ஜூன் 22) இரவு 11 மணி வரை நீடித்த நேரப் பேச்சுவார்த்தையின் முடிவில், கிழக்கு லடாக் எல்லையில் பதற்றமான பகுதிகளில் இருநாட்டு ராணுவமும் நிறுத்தியுள்ள படைகளைத் திரும்பப் பெறுவது என உடன்பாடு எட்டப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து, “ராணுவ அளவிலான பேச்சுவார்த்தையில் இருதரப்பும் விலகிச் செல்வதென முடிவு எடுத்துள்ளன. கிழக்கு லடாக் பகுதியில் உரசல் போக்கு நிலவி வரும் அனைத்து இடங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. பிரச்சினைக்குரிய இடங்களிலிருந்து விலகிச் செல்வது என இருதரப்பும் ஒப்புக்கொண்டன,” என இந்திய ராணுவத்துக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்தது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online