இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தான அனைத்து ஒப்பந்தங்களையும் சீனா அப்பட்டமாக மீறியுள்ளது என இந்தியாவின் மத்திய வெளியுறவுத் துறை குற்றம் சாட்டியுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
அப்பகுதியில் இந்திய வீரர்கள் பல ஆண்டுகளாக சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த மே மாத தொடக்கத்திலேயே கிழக்கு லடாக் பகுதிகளில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றதாகச் சாடினார்.
தற்போது நிகழ்ந்த மோதலுக்கு சீனாதான் காரணம் என்று கூறிய அனுராக் ஸ்ரீவஸ்தவா, இரு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தங்களை மீறும் வகையில் சீன வீரார்கள் செயல்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியத் தரப்பில் எல்லைக்கோட்டை மாற்றுவதற்கு எந்தவித முயற்சியும் செய்யவில்லை என்றும் சீனா தரப்பு தொடர்ந்து ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்றும் அவர் புகார் எழுப்பினார். எல்லைக் கோட்டை மாற்றுவதற்கு சீனா முயற்சிப்பதாகவும் அவர் மேலும் சாடினார்.
இதற்கிடையே இந்திய சீன எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. லடாக்கின் லே மலைப்பகுதியில் இந்திய வீரர்கள் நேற்று தீவிர சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டனர்.
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, பான்காங் ஏரிப்பகுதி, ஹாட் ஸ்பிரிங்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் இந்தியப் படைகள் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், கல்வான் பள்ளத்தாக்கு சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் அங்கு இந்திய வீரர்கள் அத்துமீறி நுழைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online