சிங்கப்பூருக்கு 1.36 கோடி மதிப்புள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு பணாத்தைக் கடத்தும் முயற்சியை சுங்கத் துறை அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
புடவை, சட்டைகள் வைக்கப்பட்ட பொட்டலங்களில் வெளிநாட்டு நோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
சென்ற புதன்கிழமை அன்று சிங்கப்பூருக்கு சரக்கு விமானத்தில் அனுப்ப புடவைகள், சட்டைகள் அடங்கிய நான்கு பொட்டலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
ஆனால் அந்தப் பொட்டலங்கள் மீது சுங்கத் துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து பொட்டலங்களைப் பிரித்து சோதனையிடப்பட்டது.
அப்போது, அமெரிக்க, சிங்கப்பூர் டாலர்கள், சவூதி ரியால், சுவிஸ் பிராங்க் பண நோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவற்றின் மதிப்பு இந்திய ரூபாய் 1.06 கோடி. அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்திய ரூபாய் 30 லட்சமும் கைப்பற்றப்பட்டது.
ஆரம்பக்கட்ட விசாரணையில் புகைப்படத் தொழில் செய்யும் இருவருக்கு பணம் கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இருவரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.