சீனாவுடனான எல்லைப் பிரச்சினை சிக்கல் நிறைந்ததாகவும் தீவிரமாகவும் இருப்பதால் அணுவாயுதம் உட்பட வழக்கத்திற்கு மாறான போர் உருவாகும் அச்சம் நிலவுவதாக இந்தியாவின் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.
இதுவரை இல்லாத அளவுக்கு சீனா மிகவும் மூர்க்கத்துடன் நடந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் சீனாவின் விஷமத் தனத்தை எப்படி முறியடிக்க வேண்டும், எல்லையை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது இந்திய ராணுவத்துக்குத் தெரியும் என்றார் அவர்.
சீனாவுடன் எல்லைப் பிரச்சினை நிலவும் வேளையில் மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தான், விபரீத நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சிக்கலாம் என்று அவர் எச்சரித்தார்.
அவ்வாறான நடவடிக்கைகளில் பாகிஸ்தான் முயற்சித்தால் அது கடும் இழப்புகளைச் சந்திக்க நேரிடும். இதை முந்தைய அனுபவங்களில் இருந்து பாகிஸ்தான் உணர்ந்திருக்கும் என்று தான் நம்புவதாக திரு பிபின் ராவத் சொன்னார்.
இதற்கிடையே சீனாவுடனான எல்லைப்பூசலை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் என்று இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில் வாக்குறுதியை மீறி சீனா ஊடுருவ முயற்சி செய்வதாக அண்மையில் இந்தியா குற்றம் சாட்டியிருந்தது.
இதையடுத்து சீனாவின் பிரபல ‘பைடு’, ‘பப்ஜி’ உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது.
“முழுமையாக பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்பதை உறுதியாக நம்புகிறோம்,” என்று இன்று லடாக்குக்கு பயணம் மேற்கொண்டபோது ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் நரவானே தெரிவித்தார்.
இந்தச் சூழ்நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற் பதற்காக ரஷ்யா சென்றுள்ள இந்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மாஸ்கோவில் வியாழனன்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் செர்கேய் ஷொய்குவையைச் சந்தித்துப் பேசினார்.
“ரஷ்ய பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது. ராணுவத் தளவாடங்களை வழங்குவதில் இந்தியாவுக்கு தொடா்ந்து உறுதியான ஆதரவு வழங்கி வரும் ரஷ்யாவுக்கு இந்தியா சாா்பில் நன்றி தெரிவித்துக் கொண்டேன்,” என்று திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யா வரும் சீனாவின் தற்காப்பு அமைச்சரான வெய் ஃபெங்கேவுடன் இந்தியா பேச்சு வார்த்தை நடத்தாது என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இந்தியாவுடன் பேச சீன தற்காப்பு அமைச்சு தற்போது கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது.