லடாக் எல்லையில் கடந்த ஏப்ரல் மாதம் முதலே சீனா அதிகளவில் படைகளையும் ஆயுதங்களையும் குவித்து வந்ததாக தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
லடாக்கில் சவாலான சூழ்நிலை நிலவுவதாகவும் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள இந்தியப் படைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய ராஜ்நாத் சிங், மே மாதத் தொடக்கத்தில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய வீரர்களின் வழக்கமான சுற்றுக்காவல் பணியை சீன ராணுவம் தடுக்க முயன்றதாகவும் இதன் காரணமாகவே இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது என்றும் குறிப்பிட்டார்.
அச்சமயம் களத்தில் இருந்த ராணுவ அதிகாரிகள் அந்தச் சூழலை திறம்பட கையாண்டதாகப் பாராட்டிய அவர், இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்ததாகத் தெரிவித்தார்.
“மே மாத மத்தியில் சீனப்படைகள் கோங்கா லா, கோக்ரா, பங்கோங் ஏரியின் வடக்குக் கரை உள்ளிட்ட பகுதிகளில் ஊடுருவ முயன்றன. அதை உடனடியாகக் கண்டறிந்த இந்திய ராணுவம் அந்த ஊடுருவலை முறியடித்தது. இதன் தொடர்ச்சியாக ஜூன் 15ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதல் ஏற்பட்டது. இதில் சீன ராணுவத்துக்கு நமது வீரர்களால் உயிரிழப்பு மற்றும் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டன,” என்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்.
சீன ராணுவத்தின் வன்முறையுடன் கூடிய செயல்பாடு கடந்த கால ஒப்பந்தங்களை மீறுவதாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர், நாட்டின் எல்லையைப் பாதுகாப்பதற்காக இந்திய ராணுவமும் பல இடங்களில் படைகளை நிறுத்தி உள்ளதாக சுட்டிக் காட்டினார்.
சீனாவுடன் ராணுவ மற்றும் தூதரக ரீதியாக பேச்சுவார்த்தைகள் நீடித்து வருவதாகவும் எல்லையில் நிலவும் இயல்பு நிலையைத் தன்னிச்சையாக மாற்ற நினைக்கும் சீனாவின் செயல்பாட்டை ஏற்கமுடியாது என்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாகத் தெரிவத்தார்.
கடுங்குளிர், அச்சுறுத்தும் பிராணவாயு குறைபாடு எனக் கடுமையான சூழலிலும் இந்திய ராணுவம் சிறப்பாகப் பணியாற்றுவதாக ராஜ்நாத் சிங் பாராட்டினார்.
“இந்திய வீரர்களின் மன உறுதி வலுவாக உள்ளது. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். அதேநேரம் நமது இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் வீரர்களுடன் தோளோடு தோள் நிற்பதை உறுதி செய்ய வேண்டும். நமது வீரர்களின் பின்னால் ஒட்டுமொத்த நாடும் உறுதியாகவும் ஒற்றுமையுடனும் இருக்கும் சேதியை பிரதமர் மோடியின் லடாக் பயணம் எடுத்துரைத்தது,” என்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்.