சீனாவின் உளவுத் துறைக்கு ரகசிய தகவல்களை அளித்ததாக மூன்று பேரை கைது செய்ததாக இன்று டெல்லி போலிசார் தெரிவித்தனர்.
இவர்களில் பகுதிநேர செய்தியாளரான ராஜீவ் ஷர்மாவும் ஒருவர். இந்தியாவில் சீன உளவுத் துறை பல ஆண்டுகளாக உளவு வேலையில் ஈடுபட்டுள்ளதாக இந்திய அமலாக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திரு ராஜீவ் ஷர்மாவுடன் சின் ஷி எனும் சீனப் பெண், அவரது நேப்பாள உதவியாளர் ஷெர் சிங் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூவரும் தற்காப்புத் தொடர்பான ரகசிய தகவல்களை சீன உளவுத் துறைக்கு வழங்கியதாக டெல்லி போலிசார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணையை துணை ஆணையர் (சிறப்பு) சஞ்சீவ் யாதவ் விசாரித்து வருகிறார்.
“ஷர்மாவுக்கு ஷெல் நிறுவனங்கள் வழியாக பெருமளவு பணத்தை சீனப் பெண்ணும் நேப்பாள ஆடவரும் வழங்கியுள்ளனர்,” என்று திரு சஞ்சீவ் யாதவ் சொன்னார்.
ஷர்மாவிடமிருந்து சீன உளவுத் துறையினர் ரகசிய தகவல்களை கேட்டுப் பெற்றதாகவும் அதற்கு பெருமளவில் பணம் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தென்மேற்கு டெல்லியில் உள்ள பிடாபூராவில் வசித்து வரும் ஷர்மா இம்மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர்மீது ரகசிய காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஷர்மாவிடமிருந்து 'ரகசியம்' என்று வகைப்படுத்தப்பட்ட தற்காப்பு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தொடர்ந்து அவர் விசாரிக்கப்படுவதாகவும் பெயர் தெரிவிக்க விரும்பாத போலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இம்மாதம் 15ஆம் தேதி ஷர்மா நீதிமன்றத்தில் முன்லைப்படுத்தப்பட்டார். தற்போது அவரிடம் மத்திய புலனாய்வுத் துறை, டெல்லி போலிஸ் படையின் சிறப்புப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.