கேரளத்தைச் சேர்ந்த சேவியோ ஜோசப் என்பவருக்கு கடந்த 7 மாதங்களில் மூன்று முறை கொரோனா தொற்று ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
திருச்சூர் மாவட்டம், பொன்னுக்காரா என்ற ஊரைச் சேர்ந்தவர் சேவியோ.
மஸ்கட்டில் உள்ள கிளினீங் சொல்யூசன்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அவர், பணி நிமித்தமாக கடந்த ஜனவரியில் சீனாவுக்குச் சென்று திரும்பினார்.
அதனைத் தொடர்ந்து காய்ச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட சில அறிகுறிகள் தென்படவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
குணமடைந்து வீடு திரும்பிய அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவருக்கும் தாதியருக்கும் கொவிட்-19 உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார்.
ஆனால், அவருடன் பணிபுரிந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவர்களில் சிலர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வந்தே பாரத் விமானம் மூலம் இந்தியாவுக்குத் திரும்பினார் சேவியோ. விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது.
ஆனாலும் அவர் ஒரு மாதத்துக்கு தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார்.
மீண்டும் சுவாசப் பிரச்சினை எழுவதைக் கண்டு மீண்டும் சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு தொற்று இருந்ததாகக் கூறப்பட்டது.
ஒரு மாதத்துக்குப் பிறகு செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு மீண்டும் கொவிட்-19 தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மூன்று முறை பாதிக்கப்பட்டும் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் திரு சேவியோ.