இந்திய விமானப் படையின் திறமைக்கு சீன விமானப்படை ஈடுகொடுக்க முடியாது என விமானப் படைத் தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படை தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தளபதி பதாரியா, இரு முனைப் போருக்கு இந்தியா தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
ரஃபேல் போர் விமானங்களை இணைத்துக் கொண்ட பின்னர் விமானப்படையின் பலம் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் இருமுனைப் போரை எதிர்கொள்ள விமானப்படைத் தயார் என்றார்.
கடந்த சில மாதங்களாக லடாக் எல்லைப் பகுதியில் இந்திய, சீனத் துருப்புகளுக்கு இடையே அவ்வப்போது மோதல் நிகழ்ந்து வருகிறது. இதனால் பதற்றம் நீடித்து வரும் நிலையில் தளபதி பதாரியா இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்திய விமானப்படை பலமாக உள்ளது என்றாலும், எதிரியைக் குறைத்து மதிப்பிடும் கேள்விக்கே இடமில்லை என்றார் அவர்.
எத்தகைய அச்சுறுத்தலையும் சமாளிக்க விமானப்படை தயார் நிலையில் உள்ளதாகவும் லடாக்கில் தேவைப்படும் அனைத்து இடங்களிலும் துருப்புக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட தளபதி பதாரியா, ரஃபேல் விமானங்கள் இணைப்பால் இந்திய விமானப்படை சீனாவை விட ஒரு படி விஞ்சி நிற்பதாகத் தெரிவித்தார்.